போலீசாருடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்


போலீசாருடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்
x

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனத்தில் உள்ள நரிக்குடி சாலை பகுதியில் பா.ஜனதா சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் நடந்தது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில் மானாமதுரை போலீசார் மற்றும் அதிரடிப்படை, ஆயுதப்படையினர் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்பு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஊர்வலம் தொடங்கியது. அப்போது கிருஷ்ணன் கோவில் அருகே சாலையை மறைத்து தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போலீசார், ஊர்வலத்தை கிருஷ்ணன் கோவிலுடன் முடித்து திரும்புமாறு கூறினர். அப்போது பா.ஜ.க.வினர் திருப்புவனம் புதூர் கடைசி பகுதி வரை செல்ல வேண்டும் என்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்ததால், பா.ஜ.க.வினருக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் ஊர்வலம் திரும்பி வந்து திருப்புவனம் யூனியன் அலுவலகம், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலை, தட்டாங்குளம் வழியாக சென்று தடுப்பணையில் சிலை கரைக்கப்பட்டது.



Next Story