3,110 டன் உளுந்து-820 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு


3,110 டன் உளுந்து-820 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு
x

3,110 டன் உளுந்து-820 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 3,110 டன் உளுந்தும், 820 டன் பச்சைப்பயிறும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உளுந்து-பச்சைப்பயறு கொள்முதல்

வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2022-23-ம் ஆண்டு ராபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கில் மத்தியஅரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.நடப்பு ஆண்டு தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 3,110 டன் உளுந்தும், 820 டன் பச்சைப்பயறும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல்பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டும்.

1-ந் தேதி முதல்

நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.66 வீதமும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.77.55 வீதமும் வழங்கப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைப்பயறை விற்பனை செய்து பயன் அடையலாம். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story