சேதமடைந்த வழிகாட்டி பலகையை சீரமைக்க கோரிக்கை


சேதமடைந்த வழிகாட்டி பலகையை சீரமைக்க கோரிக்கை
x

மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வழிகாட்டி பலகையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வழிகாட்டி பலகையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைக்கு தன்னுடைய தேரையே கொடுத்தார் பாரி வள்ளல். அதுபோல நவீன பாரி வள்ளல்களாக மாறும் முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் இறங்கியுள்ளனரோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு இந்த வழிகாட்டிப் பலகை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே வழிகாட்டிப் பலகைகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பயண தூரத்தை அறிந்து திட்டம் வகுப்பதற்கு உதவியாக இருக்கும்.

இந்தநிலையில் மடத்துக்குளத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டிப் பலகை சேதம் அடைந்துள்ளதால் எந்த ஊருக்கு செல்ல எவ்வளவு தூரம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அத்துடன் வழிகாட்டிப் பலகையைச் சுற்றி புத்தர் மண்டிக் கிடக்கிறது. மேலும் பலகையின் உச்சி வரை அதிக அளவில் கொடிகள் படர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.

இதனால் இந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருவதால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் அச்சமடையும் நிலை உள்ளது. எனவே புதர் செடிகளை அகற்றவும் வழிகாட்டிப் பலகையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story