திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில்-மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்


திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில்-மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2023 6:45 PM GMT (Updated: 25 Feb 2023 6:46 PM GMT)

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் மாசி தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் மாசி தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.

மாசி தெப்பத்திருவிழா

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்பத்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நேற்று மாலை சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 7.30 மணிக்கு பெருமாள் திருமண மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து கொடிமரம் அருகே புறப்பாடாகி கொடிமரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்று காலை 10.36 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா தொடங்குகிறது. காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடன், சேஷன், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 6-ம் நாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

தெப்பம் சுற்றுதல்

வருகிற 6-ந் தேதி 9-ம் நாள் அன்று காலையில் வெண்ணைய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளல், காலை 10 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல், இரவு தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி தெப்ப உற்சவ திருநாள் அன்று காலை 10.46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7.30 மணிக்கு இரவு தெப்பமும் நடக்கிறது.

விழாவின்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி தெப்பக்குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். மறுநாள் காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியும், தெப்பக்குளத்தில் பெருமாள் தங்கும் மண்டபத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெப்ப திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் தலைமையில் மேலாளர், கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story