திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பத்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு


தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:46 PM GMT)

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி அகல்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி அகல்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

மாசி மக தெப்பத்திருவிழா

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்பத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான விழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு சிம்ம வாகனம், அனுமன் வாகனம், தங்க கருட சேவை, தங்க சேஷ வாகனம், தங்க தோளுக்கினியானில் புறப்பாடு, தங்க குதிரை வாகனம், தங்க பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

6-ம் நாள் திருவீதி புறப்பாடு மற்றும் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ம் நாள் காலையில் வெண்ணைத்தாழி சேவையில் திருவீதி புறப்பாடு மற்றும் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், இரவு தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விளக்கேற்றி வழிபாடு

இதைதொடர்ந்து 10-ம் நாளான நேற்று தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. முன்னதாக காலை தங்க தோளுக்கினியானில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுமிய நாராயண பெருமாள் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின்னர் மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்று பின்னர் தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை வழிபட்டனர். மேலும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் தெப்பக்குளத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் இரவில் இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

சாமி தரிசனம்

தெப்பத்திருவிழாவையொட்டி சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.


Next Story