பாம்பன் குருசடைதீவு பகுதியில் படகு போக்குவரத்து நிறுத்தம்


பாம்பன் குருசடைதீவு பகுதியில் படகு போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 13 May 2023 6:45 PM GMT (Updated: 13 May 2023 6:46 PM GMT)

சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக பாம்பன் குருசடைதீவு உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக பாம்பன் குருசடைதீவு உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

படகு சவாரி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட வனத்துறை மூலம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவு மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து பாம்பன் ரோடு பாலம் வரையிலான கடல், உச்சிப்புளி அரியமான், ஏர்வாடி பிச்சைமூப்பன்வலசை கடற்கரை, தொண்டி காரங்காடு உள்ளிட்ட இடங்களில் சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் சுற்றுலா படகு சவாரி நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதன் எதிரொலியாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

இதனிடையே சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவு வரை இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து 3-வது நாளாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்

இதேபோல் மண்டபம், உச்சிப்புளி அரியமான் கடற்கரை, ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசை கடற்கரை, தொண்டி காரங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வனத்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் வருகிற 18-ந் தேதி வரையிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். கடல் சீற்றமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே வனத்துறை மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நடைபெற்று வரும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்த பின்னர் வழக்கம் போல் இந்த சுற்றுலா படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது கோடைகால விடுமுறை நடந்து வரும் நிலையில் பாம்பன் குந்துகால் மற்றும் மாவட்டம் முழுவதும் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் படகில் சென்று கடல் அழகை பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Next Story