படகுகள் ஊடுருவல் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்-மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பு குழும அதிகாரி அறிவுறுத்தல்


படகுகள் ஊடுருவல் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்-மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பு குழும அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 20 Aug 2023 6:46 PM GMT)

படகுகள் ஊடுருவல் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பு குழும அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

படகுகள் ஊடுருவல் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பு குழும அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை தேவிபட்டினம் கடற்கரை போலீஸ் நிலையம் அருகில் நடந்தது. கூட்டத்துக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீஸ் சூப்பிரண்டு பி.சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வாலி நோக்கம் மீனவர் பேசும் போது, கடலில் இறக்கக்கூடிய மீனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமாகி வருகிறது. இதனால் அரசு சார்பில் கிடைக்க வேண்டிய நிவாரணம் கிடைப்பதில்லை.ஆகையால் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆம்புலன்ஸ்

இதைத் தொடர்ந்து ஆற்றங்கரையை சேர்ந்த மீனவர் சங்கத்தலைவர் முகமது அலி ஜின்னா பேசும்போது, கரை ஓரங்களில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் நாட்டுப்புற மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆகையால் அரசு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் மட்டும் அனுமதி வழங்க வேண்டும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் மோர் பண்ணை என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர் பேசும் பொழுது மீனவர்களின் நலனைக் காத்திட துறைமுக ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் கடலில் பாதிக்கப்படக்கூடிய மீனவர்களை உடனே ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல வசதியாக இருக்கும் என பேசினார்.

இதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழுமத்தின் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு பேசியதாவது:-

தகவல் தெரிவிக்க வேண்டும்

கடலோர கிராமங்களிலே அன்னிய நபர்கள் ஊடுருவல், அன்னிய படகுகள் ஊடுருவல் இருந்தாலே மற்றும் ஆட்கடத்தல், சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் அத்தியாவாசிய பொருட்கள் கடத்தல் சம்பந்தப்பட்ட நபர்களைப் பற்றிய தகவலை தெரிந்தால் உடனுக்குடன் காவல் துறையினருக்கு உடனடியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் இலவச தொலைபேசி எண் -1093 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவர்களின் வேலைக்காகவும், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மீன்வளத் துறையின் சார்பாக இன்ஸ்பெக்டர் அப்தாகிர் மற்றும் சாகர் மித்ரா பணியாளர்களான தீபா, நவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story