தலை இல்லாமல் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மீனவர் உடல்


தலை இல்லாமல் தனுஷ்கோடியில்   கரை ஒதுங்கிய மீனவர் உடல்
x

தலை இல்லாமல் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மீனவர் உடலை போலீசார் கைப்பற்றினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரையில் உடல் ஒன்று கரை ஒதுங்கிக் கிடப்பதாக மீனவர்கள், கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடற்கரையில் தலையில்லாமல் ஒதுங்கி கிடந்த உடலை கைப்பற்றினர்.

விசாரணையில் இறந்து கிடந்தது தூத்துக்குடி தருவை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் என்பது தெரியவந்தது. கடந்த 15-ந் தேதி விசைப்படகில் 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இந்த படகில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் பகுதியை சேர்ந்த மீனவர் முகமது அலிஜின்னா (வயது 37) கடலில் தவறி விழுந்ததாக மீனவர்கள் தூத்துக்குடி தருவைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதையடுத்து தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கிடந்த இந்த மீனவரின் உடலை அடையாளம் பார்த்ததில் அது முகம்மது அலி ஜின்னா என தெரியவந்தது. மீனவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story