மாவட்டத்தில் புத்தக திருவிழா -27-ந் தேதி முதல் நடக்கிறது


மாவட்டத்தில் புத்தக திருவிழா -27-ந் தேதி முதல் நடக்கிறது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகிற 27-ந் தேதி முதல் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகிற 27-ந் தேதி முதல் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புத்தக திருவிழா

சிவகங்கை மாவட்டத்தில், புத்தக திருவிழா-2023 மற்றும் இலக்கிய திருவிழா நடத்துவது தொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மாவட்டத்தில் கடந்தாண்டு புத்தக திருவிழா சிறப்பான முறையிலும், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலும் நடைபெற்றது. இந்தாண்டும், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 27-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை 11 நாட்கள் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கூட்டாக புத்தகம் வாசித்தல், இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுப்பொருட்கள் போன்றவை இடம் பெற உள்ளன.

120 அரங்குகள்

புத்தக திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் 110 அரங்குகள் புத்தக விற்பனைக்கும், 10 அரங்குகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல வாகன வசதிகள், தேவையான இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் ஈடுபடுவார்கள். அவசர தேவை கருதி பொது சுகாதாரத்துறையினர் தனி அரங்கம் அமைத்து தேவையான மருத்துவ வசதிகளை வழங்க உள்ளனர்.

மேலும் மாவட்டத்தின் அடையாளமாக திகழும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள், கோட்டைகள், அரண்மனை மாதிரிகள், பாரம்பரியமிக்க உணவு வகைகள் இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயன்ெபறலாம்

பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், பெற்றோர்கள் இந்த புத்தக திருவிழாவில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் வானதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story