கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

வாணாபுரம் அருகே முகமூடி கொள்ளையர் கைவரிசை: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக வாணாபுரம் போலீசாருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் கருவறையில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதில் கடந்த ஆண்டு முதல் உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணவில்லை என்றும், இதனால் ரூ.50 ஆயிரத்தை அவர்கள் திருடி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் அதே பகுதியில் உள்ள வீரபத்திரர் கோவில், முனீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் பிடாரி காளியம்மன் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து பார்த்ததில் அதில் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்தது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story