கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

கிணத்துக்கடவில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குழாயில் உடைப்பு
பொள்ளாச்சி அருகே ஆத்து பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்க 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் கோவை-பொள்ளாச்சி சாலையோரம் மழைநீர் வடிகால் அருகே பதிக்கப்பட்டு இருந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. மேலும் குழாயில் இருந்து லட்சகணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஆறுபோல் ஓடியது. இதனை பார்த்த கிணத்துக்கடவு பேரூராட்சி குடிநீர் பணியாளர்கள் உடனடியாக குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சீரமைப்பு பணி
இதைதொடர்ந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயை சீரமைக்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
நேற்று அதிகாலை 2 மணியளவில் மின்தடை காரணமாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய ராட்சத குழாய்களில் உள்ள குடிநீரை வெளியேற்றினால் மட்டுமே சரிசெய்ய முடியும். இதனால் தற்போது குழாயில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு, குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. குழாய் சரிசெய்த பின்னர் குடிநீர் வினியோகம் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






