10 மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகள் திருட்டு


10 மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகள் திருட்டு
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:45 PM GMT)

விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்பாதையில் உள்ள 10 மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகள் திருட்டு திருக்கோவிலூர் பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் பாதைகளில் உள்ள மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்து அதில் உள்ள தாமிர கம்பிகளை திருடி செல்லும் சம்பவம் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. கடந்த 15 நாட்களில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தானம், கீழ்ப்பாடி, காட்டுச்செல்லூர், காட்டு எடையார், ரிஷிவந்தியம், வடதொரசலூர் ஆகிய கிராமங்களில் தலா 1 மின் மாற்றிகள், கீழத்தாழனூர் மற்றும் பழங்கூர் கிராமங்களில் தலா 2 மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த தாமிர கம்பிகளை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளதால் கிராமங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

வயல் பகுதிகளில் அதிக அளவில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதால் இது திருடர்களுக்கு சாதகமாகி விடுகிறது. எனவே மின்மாற்றிகளில் தாமிர கம்பிகள் திருட்டை தடுக்க மின்சார வாரியம் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்பட்ட மின் மாற்றிகளுக்கு பதிலாக புதிய மின்மாற்றிகைள அமைத்து மின்சாரம் வினியோகம் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story