திருவாரூரில், செங்கல் உற்பத்தி தொடக்கம்


திருவாரூரில், செங்கல் உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 8 April 2023 7:15 PM GMT (Updated: 8 April 2023 7:15 PM GMT)

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் திருவாரூரில் செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளது. செங்கற்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

திருவாரூர்

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் திருவாரூரில் செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளது. செங்கற்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

செங்கற்களின் தேவை

உலகம் முழுக்க வானுயர்ந்து நிற்கின்றன கட்டிடங்கள். நாள்தோறும் மேலும் பல கட்டிடங்கள் முளைத்த வண்ணம் உள்ளன. கட்டுமான தொழிலில் மிகமுக்கியமானது செங்கல். சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல்.

தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

வேலைவாய்ப்பு

ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. இந்த தொழிலில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை வகிக்கிறது. காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி சாகுபடி நடைபெறுவதால் சில இடங்களில் குறுவை சாகுபடியும், கோடை சாகுபடியும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது.

தேவை அதிகரிப்பு

விவசாயிகள் பலர் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டுமே நம்பி உள்ளனர். தண்ணீர் பிரச்சினையாலும், இயற்கை இடர்பாடுகளாலும் விளைநிலங்கள் பரப்பளவு பெருமளவு குறைந்து விட்டது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. வீடு கட்டுமான பணிகள் அதிகரிப்பதால் மூலதன பொருளான செங்கலின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வருவாய் தரும் செங்கல் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தி தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பன், புதுக்குடி, வலங்கைமான் போன்ற பகுதிகளில் களிமண்ணுடன், மணல் கலந்து செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் வளம் உள்ளது. தற்போது திருவாரூரில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் செங்கல் உற்பத்தி பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

செங்கல்களை கலவை போட்டு தயார்செய்ய ஆரம்பித்து விட்டனர். இதுகுறித்து திருவாரூர் சூரனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மழையால் செங்கல் உற்பத்தி பாதித்தது. இதனால் இந்த ஆண்டு பலரும் உற்பத்தியை தொடங்கவில்லை. கடந்த ஆண்டு ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டுக்கல் என்று சொல்லக்கூடிய 1 செங்கல் இந்த ஆண்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழை நீரில் கரைந்து விடுகிறது

மண் இல்லாத காரணத்தால் சிலர் மீண்டும் விவசாயத்திற்கே திரும்பி விட்டனர். ஒரு செங்கல் தயாராக 15 நாட்கள் வரை ஆகிறது. சொந்த நிலத்தில் சூளை வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் வேறு இடத்தில் செங்கல் உற்பத்தியில் ஈடுபடுவர்களுக்கு கூடுதல் செலவாகும். சொந்த இடத்தில் செங்கல் சூளை வைத்திருப்பவர்களுக்கு உற்பத்தி செலவுமட்டும் தான். 1 லட்சம் செங்கல் தயாரித்தால் அதில் 90 ஆயிரம் கற்கள் தான் மிச்சப்படும்.

மழைக்காலங்களில் உற்பத்தி செய்து வைக்கப்படும் செங்கல் மழையில் நனைந்து சேதமடைகிறது. மீண்டும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல் செங்கல் உற்பத்திக்கு சேகரித்து வைக்கப்படும் மண் மழைநீரில் கரைந்து போய் விடுகிறது. எனவே மழைக்காலங்களில் வேலையின்றி வருமானத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு நிதிஉதவி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மண் கிடைப்பதில்லை

வீடு கட்ட செங்கல் தான் உகந்தது என்பதால் பலர் செங்கற்களை விரும்பி தேர்வு செய்கிறார்கள். உள்ளூரில் உற்பத்தி குறைந்து விட்டகாரணத்தால் வெளியூர்களில் இருந்து கற்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் தேவை அதிகரித்துவருகிறது. செங்கல் விலை உயர்ந்ததால் மற்ற கூலிகளும் உயர்ந்து விட்டது. இந்த நிலையில் செங்கல் உற்பத்தி செய்ய தேவையான மண் போதிய அளவு கிடைப்பதில்லை என்று செங்கல் உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.


Next Story