திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம சாவு


திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம சாவு
x

புவனகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மான முறையில் இறந்தது குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர்

புவனகிரி,

பொக்லைன் எந்திர டிரைவர்

புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மகன் மாமலைவாசன்(வயது 27). பொக்லைன் எந்திர டிரைவரான இவர் திட்டக்குடி தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் மகள் அபிநயா(18) என்பவரை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூக்கில் ரத்த காயங்களுடன் அபிநயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கணவர் பிடிபட்டார்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினா் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மருதூர் போலீசார் விரைந்து வந்து அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக அபிநயாவின் தாய் கீதா கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அபிநயாவின் சாவு குறித்து மாமலைவாசனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சப்-கலெக்டர் விசாரணை

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாசுமன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story