வீட்டின் பூட்டை உடைத்து10 பவுன் நகை-பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து10 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Jun 2023 6:49 PM GMT (Updated: 21 Jun 2023 9:42 AM GMT)

விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

நகை-பணம் திருட்டு

விராலிமலை அம்மன் கோவிலை சேர்ந்தவர்கள் காமராஜ்-புவனேஸ்வரி. இவர்கள் கடைவீதியில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காமராஜ் 2 நாட்களுக்கு முன்பு சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், புவனேஸ்வரி மட்டும் கடையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் புவனேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு தனது பூக்கடைக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்ற போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விராலிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த மாதிரிகளை சேகரித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விராலிமலையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story