வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் கொள்ளை
x

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் கொள்ளைபோனது.

திருச்சி

ஜீயபுரம்:

மகனை பார்க்க சென்றார்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே உள்ள திருப்பராய்த்துறை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமண குப்தா(வயது 65). இவர் திருப்பராய்த்துறை மெயின் ரோட்டில் மாவு அரைக்கும் மில் மற்றும் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நாமக்கல்லில் வேலை செய்யும் தனது மகனை பார்ப்பதற்காக லட்சுமண குப்தா, தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. இது பற்றி அவர், செல்போன் மூலம் லட்சுமண குப்தாவுக்கு தகவல் ெதரிவித்தார்.

நகைகள் கொள்ளை

இதையடுத்து குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பிய அவர் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள், நவரத்தின மாலை, மோதிரம் மற்றும் தோடு, ஜிமிக்கி உள்ளிட்ட 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசில் லட்சுமண குப்தா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story