வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை, ரூ.65 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

கதவின் பூட்டு உடைப்பு

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள ஜமால்புரம் பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 54). இவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் துளசி கடந்த 10-ந் தேதி காலை சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலையில் அதே பகுதியை சேர்ந்த துளசியின் உறவுக்கார பெண் வீட்டில் மின்விளக்குகள் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

அவர் மறுநாள் காலையில் மின்விளக்குகளை அணைப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக செல்போனில் துளசிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நகை, பணம் திருட்டு

அதன்பேரில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரேகா, கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரித்தனர். இதற்கிடையே துளசி சென்னையில் இருந்து ஜமால்புரத்துக்கு விரைந்து வந்தார். அவர் வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 7½ பவுன் நகைகள், ரூ.65 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். ம்லும் இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story