அவினாசி: வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை


அவினாசி: வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
x

அவினாசியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு மருத்துவமனை எதிரே ராஜாஜி வீதியில் வசிப்பவர் அப்துல்வகாப் (52) இவருக்கு திருமணமாகி ரோஜா (48) என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் திருமுருகன்பூண்டியில் மளிகை கடையும், திருப்பூரில் ஸ்டேசனரி கடையும் நடத்தி வருகிறார்

இந்த நிலையில்மைசூரில் உள்ள இவரது உறவினர் இறந்துவிட்டதால் கடந்த 3-ம் தேதி குடும்பத்துடன் சென்றுவிட்டு நேற்று மாலை திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 60 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டு உரிமையாளரிடம் விசாரனை மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் விசாரித்து வந்தனர்.

மேலும் போலீஸ் மோப்பநாய் டெவில் கொண்டுவரப்பட்டதில் ராஜாஜி வீதியிலிருந்து அடுத்த வீதிவரை சுற்றி வந்து நின்றுவிட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் 2 மர்ம நபர்கள் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு சிறிது தொலைவில் பைக்கை நிறுத்திவிட்டு அந்த வீதியில் சுற்றியதாக அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் தெரிவித்தார்.

நெருக்கமாக குடியிருப்பு நிறைந்த பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அவினாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story