2 அரசு பஸ்கள் ஜப்தி


2 அரசு பஸ்கள் ஜப்தி
x

வாகன விபத்தில் பலியானவர்களுக்கு விபத்து இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

திருப்பூர்

வாகன விபத்தில் பலியானவர்களுக்கு விபத்து இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

விபத்தில் டிரைவர் பலி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 11-7-2017 அன்று தனது இருசக்கர வாகனத்தில் சங்கர் சென்னிமலையில் இருந்து ஈங்கூர் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் மோதிய விபத்தில் சங்கர் இறந்தார்.

சங்கரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவருடைய பெற்றோர் சென்னியப்பன், அன்னபூரணி ஆகியோர் திருப்பூர் வாகன விபத்து தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். சங்கரின் இழப்புக்கு ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்தை அரசு போக்குவரத்து கழகம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால் ஜப்தி மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவின் பேரில் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

பனியன் நிறுவன தொழிலாளி

இதுபோல் திருப்பூர் அவினாசிபாளையம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (40). இவர் பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த 30-7-2019 அன்று கருப்பசாமி தனது இருசக்கர வாகனத்தில், அவினாசிபாளையம் திருச்சி-கோவை மெயின் ரோட்டில் சென்றபோது அரசு பஸ் மோதிய விபத்தில் பலியானார்.

கருப்பசாமிக்கு விபத்து இழப்பீடு கேட்டு அவருடைய மனைவி அன்னலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் திருப்பூர் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இழப்பீடு வழங்காததால் ஜப்தி மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர். மேற்கண்ட 2 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல்கள் முருகேசன், சத்யா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.


Related Tags :
Next Story