அரூர் அருகே பஸ்-சரக்கு வேன் மோதல்; 11 பக்தர்கள் காயம்


அரூர் அருகே பஸ்-சரக்கு வேன் மோதல்; 11 பக்தர்கள் காயம்
x
தினத்தந்தி 11 Jun 2023 1:00 AM IST (Updated: 11 Jun 2023 7:08 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்

அரூர் அருகே கோவிலுக்கு வந்தபோது சுற்றுலா பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பக்தர்கள் காயமடைந்தனர்.

பஸ்-வேன் மோதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏத்தாப்பூரில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு பஸ்சில் ஆன்மிக சுற்றுலா வந்தனர். இந்த பஸ் நேற்று காலை அரூர் வழியாக வந்து கொண்டு இருந்தது. எருமியாம்பட்டி அருகே பஸ்சும், எதிரே வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சும், வேனும் நொறுங்கியது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பக்தர்கள் ரகு, ராணி, பாலசுப்பிரமணியம், காந்தா உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் காயமடைந்து அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story