புதர் மண்டி கிடக்கும் அரசு மாணவர் விடுதி


புதர் மண்டி கிடக்கும் அரசு மாணவர் விடுதி
x
தினத்தந்தி 2 July 2023 8:00 PM GMT (Updated: 2 July 2023 8:00 PM GMT)

கூடலூர் அரசு மாணவர் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. அங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அரசு மாணவர் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. அங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

அரசு மாணவர் விடுதி

கூடலூரில் அரசு தகைசால் பள்ளிக்கூடம் உள்ளது. இப்பள்ளியை சுற்றி தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மாணவ-மாணவிகள் விடுதிகள் உள்ளன. இது தவிர வட்டார கல்வி அலுவலர் அலுவலகமும் அருகில் உள்ளது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரசு விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

இதில் அரசு மாணவர் விடுதி மற்றும் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம், அரசு தகைசால் பள்ளிக்கூடம் அருகருகே உள்ளது. இந்தநிலையில் அரசு மாணவர் விடுதியை சுற்றிலும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் விடுதிகளில் உள்ள ஜன்னல்களை புதர்கள் சூழ்ந்து உள்ளன. இதன் காரணமாக விஷ ஜந்துக்களான பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேலும் ஜன்னல்கள் வழியாக பாம்புகள் விடுதிக்குள் புகும் அபாயம் உள்ளது.

அகற்ற கோரிக்கை

இதன் காரணமாக அங்கு தங்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. அவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதேபோல் அரசு பள்ளிக்கூடமும் அருகே உள்ளதால் வகுப்பறைக்குள் பாம்புகள் செல்லும் நிலை உள்ளது. இதுதவிர இரவில் காட்டுப்பன்றிகள், கரடி, சிறுத்தை நடமாட்டமும் தென்படுகிறது.

இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதர்களை முழுமையாக வெட்டி அகற்றி தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை அகற்றப்பட வில்லை. இதனால் அரசு மாணவர் விடுதி புதர் மண்டி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story