மாவட்டத்தில் இன்று இடைத்தேர்தல்


மாவட்டத்தில் இன்று இடைத்தேர்தல்
x

மாவட்டத்தில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

அரியலூர்

இன்று வாக்குப்பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வி.களத்தூர் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், ஆண்டிமடம் ஒன்றியம், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

22 வாக்குச்சாவடிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், 2 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தலா 2 பேரும் போட்டியிடுகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், 5 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 13 பேரும் போட்டியிடுகின்றனர்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் வாக்களிக்க தலா 11 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஏற்கனவே வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அரசு அலுவலர்களால் வழங்கப்பட்டது.

ஓட்டுப்பெட்டிகள்

நேற்று மாலை வாக்குச்சாவடிக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு, வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. வாக்காளர்கள் பூத் சிலிப்புடன், வாக்காளர் அடையாள அட்டை அல்லது வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட மத்திய-மாநில அரசுகளின் ஆவணங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று வாக்களிக்கலாம்.

வாக்காளர்கள்

இடைத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5,538 வாக்காளர்களும், அரியலூர் மாவட்டத்தில் 4,831 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பணியில் தலா 44 அரசு அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் மாவட்டத்தில் 120 போலீசாரும், அரியலூர் மாவட்டத்தில் 210 போலீசாரும் ஈடுபடவுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் 15-ந்தேதி பதவி ஏற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தா.பழூர் பகுதியில்...

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் தென்கச்சி பெருமாள் நத்தம் 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடப்பதையொட்டி, வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான ஓட்டுப்பெட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார்படுத்தப்பட்டு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவற்றை அனுப்பி வைத்தனர்.


Next Story