சாலையில் கேபிள் புதைக்கும் பணி: பரங்கிமலையில் 20-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்


சாலையில் கேபிள் புதைக்கும் பணி: பரங்கிமலையில் 20-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
x

சாலையில் கேபிள் புதைக்கும் பணி நடைபெற இருப்பதால் பரங்கிமலையில் 20-ந் தேதி முதல் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பரங்கிமலை போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஜி.எஸ்.டி. சாலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே உள்செல்லும் சாலையிலும், வெளிசெல்லும் சாலையிலும் தமிழ்நாடு மின்சார வரியம் சார்பாக 400 கிலோ வோல்ட் கேபிள் அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது.

இதனால், வாகன போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்ல 20-8-2022 மற்றும் 21-6-2022 ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி. சாலை விமான நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.

பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா வழியாக) செல்லலாம். வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் சிப்பெட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க. தொழில் பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story