மத்திய அரசு மீதான ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணை -கே.எஸ்.அழகிரி பேட்டி


மத்திய அரசு மீதான ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணை -கே.எஸ்.அழகிரி பேட்டி
x

மத்திய அரசு மீதான ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரயான்-3 தனது இலக்கை அடைந்தது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான நாள். இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் குறிப்பாக தமிழகத்தை சார்ந்த விஞ்ஞானிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு அடிப்படை அமைத்தவர் ஜவஹர்லால் நேரு தான்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, அவருடைய அரசியல் செல்வாக்கு மற்றும் நீதிமன்றத்தின் மூலமாக சட்ட ரீதியாக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார்.

கர்நாடகா தண்ணீரை திறந்த உடனே அதற்கு கர்நாடகா பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரிகள் பொம்மையும், எடியூரப்பாவும்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தமிழக பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காததன் மூலம் தமிழர் விரோதி என்பதை தமிழக பா.ஜ.க. மக்களிடம் தெளிவாக காட்டுகிறது.

விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறது

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி. தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ரூ.7½ லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளது. ஒரு கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு ரூ.18 கோடி செலவாகும். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி செலவு செய்துள்ளீர்கள். எப்படி அந்த பணத்தை கொடுத்தார்கள். இதற்கு பிரதமர் பதில் சொல்லவில்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

2ஜி ஊழல் என்பது அனுமானமாக சொல்லப்பட்டது. அது பூஜ்ஜியம் இழப்பு என்று கபில்சிபல் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று ரூ.18 கோடி ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. அதற்கு ரூ.250 கோடி செலவு செய்து உள்ளீர்கள். எப்படி கருவூலத்தில் பணத்தை கொடுத்தார்கள். உங்கள் துறை அனுமதிக்காத ஒரு தொகையை ஒப்பந்ததாரர்கள் எப்படி பெற முடிந்தது. இதுதான் குற்றச்சாட்டு. ரூ.7½ லட்சம் முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறது.

சுங்கச்சாவடி முறைகேடு

பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் சுமார் ரூ.6.5 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடிகளிலும் முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் மனதார பாராட்டுகிறது, வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story