குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லை:அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?-தேர்வர்கள் கருத்து


குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லை:அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?-தேர்வர்கள் கருத்து
x

குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லை: அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?- என்பது பற்றி தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

திருநெல்வேலி

'காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', 'அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?'

-இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன.

பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வு ஊதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் அரசுத் துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

டி.என்.பி.எஸ்.சி.

அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதனைத் தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.

1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதிவாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது.

தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்குப் பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்தத் தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.

வயது விலக்கு

அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர்.

இதில் குரூப்-4, குரூப்-2, 2ஏ ஆகிய பிரிவுகளில்தான் அதிகமான பணியிடங்களும் இருக்கும் அதிகமான போட்டிகளும் இருக்கும்.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வு ஆவதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டித் தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2ஏ, 3ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன.

குரூப்-1தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சோளப்பொரி

இது யானைப் பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக் கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப் பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இதுபற்றி தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

ஆண்டு ேதாறும் நடத்த வேண்டும்

நெல்லை அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த மகாராஜன்:-

நான் குரூப்-2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று உள்ளேன். மெயின் தேர்வுக்கு தொடர்ந்து தயாராகி வருகிறேன். முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் நடந்த பிறகு 9 மாதங்கள் கழித்துதான் மெயின் தேர்வு நடக்கிறது. குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இந்த தேர்வுகளை அடுத்தடுத்து நடத்தி, முடிவுகளை அறிவித்தால் நன்றாக இருக்கும். அரசு பணியாளர் தேர்வுகளை ஆண்டு தோறும் நடத்த வேண்டும்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த புஷ்பராஜன்:-

கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட குரூப்-2 மெயின் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதற்காக தொடர்ந்து படித்து வருகிறேன். குடும்ப சூழ்நிலை, பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே ஒரு தேர்வுக்கு ஓராண்டு காலம் படித்து வருகிறேன். ஏற்கனவே கொரோனா பாதிப்புடன் சேர்த்தால் 4 ஆண்டுகளாக அரசு பணி தேர்வுகளுக்கு ஏராளமான இளைஞர்கள் படித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையில், குரூப்-2, 2ஏ-க்கான புதிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. மேலும் குரூப்-4 பணிக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுவிட்டு தேர்வை அடுத்த ஆண்டுக்கு கொண்டு போய்விட்டனர். தற்போது தேர்வு நடத்தினாலும் முடிவுகள் வெளியிடுவதில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது.

உடனடி முடிவு

பழையபேட்டையைச் சேர்ந்த மாரியம்மாள்:-

நான் எம்.எஸ்.சி. படித்து உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழக அரசு குரூப்-4 தேர்வுக்கு படித்து வருகிறேன். தற்போது குரூப்-4 பணிக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. அதில் காலியிடங்கள் எவ்வளவு போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. வருகிற 2023-ம் ஆண்டு இந்த தேர்வை நடத்தி படித்த இளம்பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஏற்கனவே எழுதிய குரூப்-4 தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும். அதை வெளியிட்டால்தான் அடுத்த தேர்வுக்கு தயாராக வசதியாக இருக்கும்.

வி.எம்.சத்திரத்தை சேர்ந்த பாக்யராணி:-

நான் பி.ஏ. தமிழ் படித்து உள்ளேன். கடந்த முறை நடைபெற்ற குரூப்-2 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, மெயின் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வருகிறேன். ஆண்டு தோறும் போட்டி தேர்வுகளை நடத்தி அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.

பல இளைஞர்கள், இளம்பெண்கள் இந்த போட்டி தேர்வுகளை நம்பி திருமணம், தனியார் வேலை வாய்ப்புகளை தள்ளி போட்டு வருகிறார்கள். எனவே அரசு தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்.

பெரிய அடையாளம்

தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி குமாரவேல்:-

நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்- 2, 4 தேர்வு எழுதுவதற்கு தயார் செய்து வருகிறேன். தற்போது தேர்வாணையத்தின் மூலம் குறைவான காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் இதை நம்பி தேர்வுக்காக தயார் செய்து வரும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது.

குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பி.ஏ. பட்டதாரி சதீஷ்குமார்:-

காலியிடங்கள் குறித்து சரியான அறிவிப்பு இல்லை. ஆவின் பால், போக்குவரத்து, மின்வாரியம் போன்ற துறைகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலமாகத்தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறினார்கள். இதுகுறித்து அந்த அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை. இதனை மனதில் கொண்டு படித்தவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். மொத்த காலியிடம் 1,754 என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 10,000 காலியிடங்கள் என்று அறிவித்தால் தேர்வர்களுக்கு ஒரு உற்சாகம் கிடைக்கும். அரசு பணி என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. அரசு பணியாளர் ஒரு விஷயத்தை கூறுவதற்கும், தனியார் நிறுவன ஊழியர் ஒரு விஷயத்தை கூறுவதற்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது. அரசு பணி சமூகத்தில் அங்கீகாரம் மட்டுமல்லாமல் ஒரு பெரிய அடையாளத்தையும் கொடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுப் பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக மாற்றி அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாமல் இருக்கிறது என்றும், இனி வரக்கூடிய நாட்களில் 60 வயதை எட்டுபவர்கள் பணி இடங்கள் காலியிடங்களாக கருதி பட்டியல் வரும். அவ்வாறு வரும்போது, அந்த காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் சொல்லப்படுகிறது.


Next Story