அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்


அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 4 April 2023 7:00 PM GMT (Updated: 4 April 2023 7:00 PM GMT)

நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாகப்பட்டினம்

நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அமரநந்தீஸ்வரர் கோவில்

நாகையில் அபீதகுஜாம்பாள் உடனாகிய அமரநந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்திர பகவான் வழிபாடு மேற்கொண்டு சாப விமோசனம் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு அலங்கார வாகனங்களில் அமரநந்தீஸ்வரர், அபீதகுஜாம்பாளுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் காலை 8 மணியளவில் தேரில் சாமி எழுந்தருளி தேரோட்டம் நடந்தது.

அப்போது திரளான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர். சாமி தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் தேர்களும் வலம் வந்தன. தேர்கள் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் நாகை, திருவாரூர், காரைக்கால் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story