பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்தது: பஸ்சுக்கு காத்திருந்த 3 பேர் பலி


பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்தது: பஸ்சுக்கு காத்திருந்த 3 பேர் பலி
x

பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்து மோதியதில் பஸ்சுக்கு காத்திருந்த 3 பேர் பலியானார்கள்.

அரக்கோணம்,

வேலூர் சாயிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). வேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரும், இவரது மனைவியும் வேலூரில் இருந்து அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

காரை என்ஜினீயர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். சாலை கிராமம் எஸ்.ஆர்.கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 5 மணி அளவில் வந்தபோது என்ஜினீயர் வெங்கடேசனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் அங்கு பஸ்சுக்கு காத்து நின்ற புதூர் கண்டிகையை சேர்ந்த சீனிவாசன் (45), எஸ்.ஆர்.கண்டிகையை சேர்ந்த கன்னியப்பன் (65) மற்றும் மாறன் கண்டிகையை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது வாய் பேச இயலாத மகள் உண்ணாமலை (45) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனே அங்கிருந்த கிராம மக்கள் விபத்தை ஏற்படுத்திய போக்குவரத்து கழக என்ஜினீயர் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story