கார்கள் மோதல்; ஒருவர் பலி


கார்கள் மோதல்; ஒருவர் பலி
x

மானூர் அருகே கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார்கள் மோதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 46). இவர் தனது வீட்டின் கட்டுமான பணிக்காக நேற்று முன்தினம் நெல்லைக்கு காரில் சென்று டைல்ஸ் கற்களை வாங்கினார். பின்னர் இரவில் காரில் சங்கரன்கோவிலுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அவருடன், கட்டிட தொழிலாளியான கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு கரும்பாட்டூரைச் சேர்ந்த ராஜசேகரனும் (30) காரில் சென்றார்.

மானூர் அருகே அழகியபாண்டியபுரம் ஆற்றுப்பாலம் அருகில் சென்றபோது, அந்த வழியாக சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த வசந்த்குமார் (22) ஓட்டி வந்த காரின் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

7 பேர் படுகாயம்

இந்த விபத்தில் முகேஷ், ராஜசேகரன் மற்றும் வசந்த்குமார், அவரது காரில் இருந்த லைசம்மாள் (23), எலிசபெத் (68), புளியங்குடியைச் சேர்ந்த திரவியம் (43), தென்காசியைச் சேர்ந்த செல்வம் (40), புன்னைவனத்தைச் சேர்ந்த ரோசலின் (55) ஆகிய 8 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி முகேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த முகேசுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


Next Story