அஞ்செட்டி அருகே3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது வழக்கு


அஞ்செட்டி அருகே3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது வழக்கு
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே 3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

அஞ்செட்டி அருகே பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி சிவக்குமார், நரேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதில் நரேந்திரன் பெயரில் இருந்த நிலத்தை கோவிலுக்கு வாங்க முடிவு செய்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த நிலத்தை வாங்க முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். இந்நிலையில் பெட்டப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ், திம்மராயன் என்பவர் மூலம் சிவக்குமார், நரேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கினார்.

அந்த நிலத்திற்கு பிரகாஷ் முள்வேலி அமைக்க சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திம்மராயன் உள்பட 3 பேரின் குடும்பத்தினரை பொதுமக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் வீடுகளுக்கு செல்லும் வழிப்பாதையை முள்வேலி போட்டு அடைத்தனர். அவர்களுடன் யார் பேசினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

8 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக திம்மராயன் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று திம்மராயன் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதை முள்வேலியை அகற்றினர். 3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து முள்வேலி அமைத்த மாதேஷ், பாலகுந்தன், பழனி, குமார், மாதேஷ், ராஜ், மாரியப்பன், ராஜா ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story