கல்குவாரி விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார்:2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு


கல்குவாரி விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார்:2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
x
சேலம்

சேலம்

கல்குவாரி விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்ட நிலையில் 2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்குவாரி

சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் சூர்யமூர்த்தி. இவர் தற்போது விருதுநகர் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். அதே போன்று காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் லட்சுமணன். இவர் தற்போது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் 2 பேரும் சேலத்தில் பணியாற்றிய காலத்தில் பெரியகவுண்டாபுரத்தில் விஜயகுமார் என்பவர் கல்குவாரியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

வழக்குப்பதிவு

இதற்கிடையே விஜயகுமாரின் தம்பி ராஜ்குமார் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தக்கோரி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் பேரில் தற்போது விருதுநகர் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சூரியமூர்த்தி, நாமக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு லட்சுமணன் ஆகிய 2 பேர் மீதும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story