அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

தேன்கனிக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மஞ்சுநாத் (வயது43). இவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார்செய்தனர்.
இதுதொடர்பாக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோவிந்தன் தலைமையில் குழுவினர், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் மஞ்சுநாத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத்தை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
போக்சோ சட்டம்
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் பள்ளிக்கு சென்று மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் காப்பக நன்னடத்தை அலுவலர் ரகுராமன் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஆசிரியர் மஞ்சுநாத் மீது புகார் செய்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான ஆசிரியர் மஞ்சுநாத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.