இளம்பெண் வரதட்சணை கொடுமை புகார்:கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

அரூர்:
சேலம் மாவட்டம் பொம்மியம்பட்டியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 26). இவருக்கும் தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவரின் குடும்பத்தினர் பெண் குழந்தைக்கு 5 பவுன் நகை ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரேணுகாவின் பெற்றோர் நகை கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கார்த்திகேயனின் குடும்பத்தினர் வரதட்சணை தொடர்பாக ரேணுகாவை தரக்குறைவாக பேசி அவருடைய தாய் வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ரேணுகா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், அவருடைய தந்தை நீலமேகம், தாயார் சகுந்தலா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.