பேக்கரிக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு


பேக்கரிக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 Sep 2023 11:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:56 AM GMT)

பேக்கரிக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேனி

போடி,

போடியை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் திருக்குமார் (வயது 40). இவர் போடியில், தேவாரம் சாலையில் பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது கடையில் போடியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது திருக்குமார், அர்ஜூனுக்கு ஒருநாள் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அர்ஜூன் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 5 பேருடன் பேக்கரி கடைக்கு சென்று தகராறு செய்தார்.

அப்போது சம்பள பாக்கியை கேட்டு அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பேக்கரியில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். இதனை தடுக்க வந்த திருக்குமாரை அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் திருக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் அர்ஜூன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story