பேரூராட்சி முன்னாள் தலைவி- செயல் அலுவலர் மீது வழக்கு

உடன்குடி பேரூராட்சி பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் தலைவி, செயல் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உடன்குடி:
உடன்குடி புதுகாலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (வயது 56). இவர் உடன்குடி பேருராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் சுடலைமாடனுக்கு கூடுதல் பணிகள் வழங்கியதுடன் அவரை அவதூறாக பேசியதாகவும், இவரிடம் முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா நன்கொடை கேட்டதாகவும், சாதியைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுடலைமாடன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுசம்பந்தமாக அவருடைய மனைவி தங்கம்மாள், குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் முன்னாள் தலைவி ஆயிஷா, தற்போதைய செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு வேலையை தடுத்தல் போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.