தம்பதி மீது வழக்கு

நிலம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள சீரகம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 52). இவர், திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வத்தலக்குண்டு அருகே உள்ள வெங்கடாஸ்திரி கோட்டையை சேர்ந்தவர் முருகேஸ்வரி. அவரது கணவர் ஜெகதீசன். இவர்கள் 2 பேரும் நிலக்கோட்டையில் ஒரு நிலத்தை விற்பதாக கூறி, பாலமுருகனிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்த 2014-ம் ஆண்டு வாங்கினர். ஆனால் அந்த நிலத்தை விற்காமலும், பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே தன்னிடம் பணம் வாங்கி பண மோசடி செய்ததாக, நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நல்லக்கண்ணன், இந்த புகார் தொடர்பாக விசாரிக்க நிலக்கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் முருகேஸ்வரி, ஜெகதீசன் ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.