மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை


மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை
x

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

கரூர்

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. சேலம் மாவட்டம் கருமாந்துறை, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்ததால் தற்போது மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வடைந்து ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வடைந்து ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story