சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது -ஐகோர்ட்டு தீர்ப்பு


சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது -ஐகோர்ட்டு தீர்ப்பு
x

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. மாநிலத்தில் வடமேற்கு மாவட்டங்கள் எல்லாம் வளர்ச்சியடைந்ததாக உள்ளது. ஆனால், தென் மற்றும் கிழக்கு மாவட்டங்கள் முன்னேறாமல் உள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக உள்ளது.

மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் பெரிய அளவில் இல்லை. விவசாய வேலைகளைத்தான் பலர் செய்து வருகின்றனர்.

அவசியம்

எனவே, அரசு வழங்கும் வேலைவாய்ப்புகள் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கவும், வறுமையை ஒழிக்கவும், எஸ்.சி. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயருவதற்கும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது அவசியமாகும். அண்மையில் கூட பீகார் மாநில அரசு சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனால் தமிழ்நாட்டிலும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 10-ந்தேதி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

முடியாது

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், ''எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்வது தமிழ்நாடு அரசின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும். அதனால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். ஏற்கனவே மனுதாரர் அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதனால், அந்த கோரிக்கை குறித்து தமிழ்நாடு அரசை அவர் அணுகலாம்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story