48 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு


48 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:45 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போன 48 செல்போன்கள் சைபர்கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போன 48 செல்போன்கள் சைபர்கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செல்போன்கள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போன் தொலைந்து போனதாக கொடுக்கப்படும் புகார்கள் முறையாக போலீஸ் நிலையங்களில் மனுக்களாக பதிவு செய்யப்பட்டு மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக கடந்த ஆண்டு மொத்தம் 926 செல்போன்கள் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டதில் 720 செல்போன்கள் மீட்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொலைந்த செல்போன்களில் 206 செல்போன்கள் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த ஆண்டு 100 செல்போன்கள் தொலைந்து போனதாக புகார் பெறப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள புகார்களில் தற்போது 48 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட சைபர்கிரைம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அவர் பேசியதாவது:-

வங்கிக்கு நேரில் சென்று

மாவட்டத்தில் சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் செல்போன்கள் நவீன தொழில்நுட்பஅடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள செல்போன்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தும், செல்போன்களை கவனமாக கையாள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்துள்ள எந்த வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் யாரும் தொலைபேசியில் அழைத்து உங்கள் வங்கி கணக்கு எண், ஓ.டி.பி. விவரங்களை கேட்க மாட்டார்கள்.

வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண், வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டில் உள்ள எண்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இணையத்தில் தேடி எந்த எண்ணையும் தொடர்பு கொள்ளக்கூடாது. முடிந்தவரை உங்களின் வங்கிக்கு நேரில் சென்று எந்த கோரிக்கையையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்பவேண்டாம்

பரிசுப்பொருள், லோன் தருவதாகவும், ஆன்லைன் வேலை என்று கூறுபவர்களையும் நம்ப வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள் பெயரில் முகநூல் உள்ளிட்டவற்றில் பணம் கேட்டால் அனுப்ப கூடாது. பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும், www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியிலும் புகாரை பதிவு செய்தால் முடிந்தளவு பணத்தினை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story