மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும்


மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 17 Nov 2022 7:30 PM GMT (Updated: 17 Nov 2022 7:30 PM GMT)

மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.

கிருஷ்ணகிரி

மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய. மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை மந்திரி ஸ்ரீ.கிரிராஜ் சிங் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலை வகித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில், ஊரகவளர்ச்சித்துறை, வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை உட்பட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள்

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். இதே போல் கட்டுமான பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும். மேலும், பசுமை கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் மரக்கன்றுகளை நடுதல், கிராமப்புற நூலகங்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரக்கன்றுகள் நடுதல் வேண்டும்.

மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்றுகள் நட்டார்

தொடர்ந்து கிருஷ்ணகிரி அணை அருகே பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.9.15 லட்சம் மதிப்பில் 1.1 ஏக்கர் நிலப்பரப்பில் கனவாய்ப்பள்ளம் குட்டை மேம்பாடு செய்யும் பணிகளையும், பழையபேயனப்பள்ளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.58 லட்சம் மதிப்பில் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மத்திய மந்திரி நேரில் பார்வையிட்டார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், ஊரக வளர்ச்சி துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளாச்சி திட்ட இயக்குனர் வந்தனாகார்க், மேலாண்மை இயக்குனர் பிரியங்கா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் (குடிநீர் வழங்கல்) ஆனந்தராஜ், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story