அர்ச்சகர் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்


அர்ச்சகர் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
x

அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை,

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் 2022-2023-ம் ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கும், மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 4 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 98 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

புதுச்சேரியிலும், தெலுங்கானாவிலும்

பின்னர் அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தெலுங்கானாவிற்கும், புதுச்சேரிக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னரே தவிர தமிழக பாரதீய ஜனதா கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளர் அல்ல. ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் குறித்து கேட்க தார்மீக உரிமை அவருக்கு இல்லை.

அவர் கவர்னராய் இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற கும்பாபிஷேக நடவடிக்கைகளை முன்னெடுத்தால் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு அவருக்கு தகுதி உள்ளது. போகிற போக்கில் ஏதாவது சிண்டு முடிந்துவிட்டு போகிற வேலையை புதுச்சேரியிலும், தெலுங்கானாவிலும் வைத்துக்கொள்ளட்டும்.

ஒரு பக்கம் சனாதனம், மறுபக்கம் சமத்துவம்

'என் மண் என் மக்கள்' என்ற பிரசார பயணம் எடுபடவில்லை என்பதற்காக ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் சமத்துவத்திற்குண்டான ஆட்சி. தி.மு.க.வின் கொள்கையே சமத்துவம்தான். ஆகவே சனாதனம் என்பது ஒரு பக்கம் என்றால், சமத்துவம் என்பது மறுபக்கம். அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவத்தைப் பற்றி பேசுகிற உரிமை உண்டு.

தமிழகத்தை பொறுத்தளவில் ஆன்மிகத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்கின்ற பணிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதுதான் எங்கள் செயல் திட்டமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுரு பரன், கமிஷனர் க.வீ.முரளீதரன், கூடுதல் கமிஷனர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா சென்னை மண்டல இணை கமிஷனர் கி.ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story