அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு


அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 3 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 7 மி.மீட்டரும், 4-ந் தேதி 10 மி.மீட்டரும், 5-ந் தேதி 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்திலும், 4 மற்றும் 5-ந் தேதிகளில் மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். இன்று முதல் 5 நாட்களுக்கு மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 40, 50, 50, 40, 50 சதவீதமாகவும் இருக்கும்.

லேசான மழை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் மற்றும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதித்து, அதற்கு ஏற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story