3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு


3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 15 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 8 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 10 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு 6 கி.மீ.வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 65 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும்.

தாதுஉப்பு கலவை

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் போது தீவன பயிர்களின் வளர்ச்சி, குறிப்பாக தீவன புற்களின் வளர்ச்சி வேகம் அதிகரித்து விரைவில், முதிர்ச்சி அடையும். மழை காரணமாக அறுவடை தாமதம் ஏற்படின், முதிர்ந்த புற்களில் நார்சத்து அதிகரித்து தீவனத்தின் செரிமான திறன் குறையும். இதை தவிர்க்க நார்சத்து நிறைந்த வைக்கோல், சோளம், ராகி தட்டைகள் மற்றும் பருத்தி கொட்டை புண்ணாக்கு ஆகியவற்றை தீவனமாக கொடுக்கலாம்.

இதேபோல் தொடர் மழை பெய்யும் சமயத்தில் தீவன பயிர்களில் உள்ள சர்க்கரை, கொழுப்பு மற்றும் தாது உப்புகள் நீரில் அடித்து செல்லப்படுவதால், மேற்படி சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய கலப்பு தீவனத்தை 250 கிராம் கூடுதலாக கொடுக்க வேண்டும். அல்லது 50 கிராம் தாது உப்பு கலவையை தீவனத்தில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story