3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு


3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 16 மி.மீட்டரும், நாளை (வியாழன்) மற்றும் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும்.

காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 12 மற்றும் 10 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் வைக்கோல் மற்றும் பசுந்தீவனங்களான கம்பு, நேப்பியர் ஒட்டுபுல், சூப்பர் நேப்பியர், கினியாபுல் மற்றும் சிறுதானிய பயிர்களில் ஆக்சலேட் அளவு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக இளம் வளரும் தீவனப்பயிர்களில் ஆக்சலேட் அளவும் அதிகம் காணப்படும்.

ஆக்சலேட் அளவு

அசைபோடும் விலங்குகளின் தீவனத்தில் 2 சதவீதத்திற்கு மேல் கரையும் ஆக்சலேட் அளவு இருப்பின் நச்சு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதேபோல் அசைபோடாத விலங்குகளான குதிரை மற்றும் முயல்களில் 0.5 சதவீதத்திற்கு மேல் கரையும் ஆக்சலேட் இருப்பின் நச்சு ஏற்படலாம். ஆக்சலேட் அதிகம் உள்ள தீவனங்களை கால்நடைகள் நீண்ட நாட்களுக்கு உட்கொள்வதால், கால்சியம் சத்து பற்றாக்குறை மற்றும் சிறுநீரக பாதையில் கற்கள் உருவாகும்.

எனவே தற்போது நிலவும் மேகமூட்டத்துடன் கூடிய பருவமழை காலத்தில் தீவன பயிர்களுக்கு தேவைக்கு அதிகமாக யூரியா மற்றும் தொழுஉரம் இடுவதை தவிர்க்க வேண்டும். இளம்வளரும் தீவன பயிர்களை அதிகஅளவு கால்நடைகளுக்கு கொடுக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story