தூய வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் தேர் பவனி


தூய வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் தேர் பவனி
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:47 PM GMT)

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலய திருவிழா

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 31-ந் தேதி சிவகாசி பங்குத்தந்தை ஜான் மார்ட்டின் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு தினசரி மாலை ஆலய வளாகத்தில் ஜெபமாலை, நவநாள் சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது.

திருவிழாவினை முன்னிட்டு ஆலயம் மின் விளக்குகளாலும், வாழை-மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தேர்பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணிமுஸ் அடிகளார், மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அல்வரஸ் அடிகளார், மதுரை இளையோர் பணிக்குழு செயலர் பன்னீர் ராஜா அடிகளார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தேரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் மின்விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தேர் புறப்பட்டதும் கிறிஸ்தவர்களும் பொதுமக்களும் மரியே வாழ்க என கோஷமிட்டாடி அன்னையின் மன்றாட்டு ஜெபங்களையும், பாடல்களையும் பாடி பிரார்த்தனை செய்தனர். தேர் பவனியில் ஆர்.ஆர்.நகர், கன்னி சேரி புதூர், கல்போது, முதலிப்பட்டி, இனாம் ரெட்டியப்பட்டி ஓ.கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் நிறைவாழ்வுநகர், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டு திருப்பலி

தொடர்ந்து திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. தினசரி நவநாள் திருப்பலியில் மதுரை கிறிஸ்டியன் ஆனந்த் அடிகளார், மதுரை அடைக்கல ராஜா அடிகளார் நிறைவாழ்வு நகர் அந்தோணிசாமி அடிகளார், சாத்தூர் காந்தி சவரிமுத்து அடிகளார், மதுரை பெனடிக்ட் பர்னபாஸ்அடிகளார், விருதுநகர் அருள் ராயன் அடிகளார், பாண்டியன் நகர் லாரன்ஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட்டர் ராய் அடிகளார், துணைப் பங்கு தந்தை அருள்தாஸ் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை, அன்பியங்கள், தூய இதய மரியன்னை சபையினர் மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.


Next Story