தர்மம், நீதி வென்றுள்ளது: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் -எடப்பாடி பழனிசாமி அறிக்கை


தர்மம், நீதி வென்றுள்ளது: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்  -எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என்றும், தர்மம், நீதி வென்றுள்ளது என்றும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., நம்மையெல்லாம் வாழவைத்த ஜெயலலிதா ஆகியோர் வழியில் அ.தி.மு.க. தொண்டர்களையும், தி.மு.க. அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.

இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கட்சி தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது.

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்

23.6.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும், 11.7.2022 அன்று கட்சியின் சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இந்த சட்டப்போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட வல்லுனர்கள், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான கட்சியின் அடிப்படை தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story