சாத்தூர் மெயின்சாலையில் காட்சி பொருளான சிக்னல்


சாத்தூர் மெயின்சாலையில் காட்சி பொருளான சிக்னல்
x

சாத்தூர் மெயின்சாலையில் காட்சி பொருளாக சிக்னல்கள் உள்ளன.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் மெயின்சாலையில் காட்சி பொருளாக சிக்னல்கள் உள்ளன.

பயன்படாத சிக்னல்

சாத்தூர் நகர் பகுதியில் மெயின் ரோடு, எல்.ஐ.சி. பஸ் ஸ்டாப், டி.எஸ்.பி. ஆபீஸ், மதுரை பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட், பழைய படந்தால் ரோடு சந்திப்பு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிக்னல் கடந்த சில நாட்களாக வேலை செய்யாமல் காட்சி பொருளாக மாறி விட்டது.

ஆதலால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிலும் மதுரை பஸ் ஸ்டாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் தூண்கள் சாலையின் நடுவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சாத்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல்கள் அமைக்கப்பட்டன. அதில் பெரும்பாலானவை தற்போது பயன்பாட்டின்றி காட்சி பொருளாக மாறி விட்டது.

இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மதுரை பஸ் ஸ்டாப் பகுதி 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் சிக்னல் சரிவர வேலை செய்யாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நியமிப்பதுடன், சிக்னல்களையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story