சென்னை, கோவை, ஈரோட்டில் பாதிப்பு அதிகம்; தமிழகத்தில் 643 பேருக்கு கொரோனா


சென்னை, கோவை, ஈரோட்டில் பாதிப்பு அதிகம்; தமிழகத்தில் 643 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 643 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று புதிதாக 23 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 390 பேரும், பெண்கள் 253 பேரும் உள்பட 643 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 107 பேர், கோவையில் 83 பேர், ஈரோட்டில் 59 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதில் 19 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 55 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 89 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. மேலும் நேற்றைய நிலவரப்படி 6 ஆயிரத்து 400 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 536 பேரும், கோவையில் 635 பேரும், செங்கல்பட்டில் 380 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 396 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 874 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story