மாகரல் அருகே செய்யாறு தரைப்பாலம் மீண்டும் சேதம்; கனரக வாகனங்கள் செல்ல தடை


மாகரல் அருகே செய்யாறு தரைப்பாலம் மீண்டும் சேதம்; கனரக வாகனங்கள் செல்ல தடை
x

மாகரல் அருகே செய்யாறு தரைப்பாலம் மீண்டும் சேதம் அடைந்தது. அதன் காரணமாக அந்த வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

தரைப்பாலம் சேதம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. காஞ்சீபுரம் மாவட்டத்தின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 284 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் காஞ்சீபுரம்- உத்திரமேரூர் சாலையில் மாகரல் அருகே அமைந்துள்ள செய்யாற்றில் தற்போது வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்யாற்று தரைப்பாலம் சேதம் அடைந்ததையொட்டி புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் மீண்டும் பாலம் துண்டிக்கப்பட்டது. அதனை தற்காலிகமாக சரி செய்து மீண்டும் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போதும் தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது.

கனரக வாகனங்கள் செல்ல தடை

இதனால் பாதுகாப்பு கருதி மாகரல் போலீசார் செய்யாறு தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தொடர்ச்சியாக செய்யாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் புதிய மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டுமே இருமுறை தற்காலிக பாலம் சேதம் அடைந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த திடீர் தடை காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் நடந்து அந்த கரைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வீடு செல்லும் நபர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வப்போது ஏற்படும் இந்த தடை முற்றிலும் நீங்கும் வகையில் தற்காலிக பாலத்தையும் முழுமையாக சீரமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப்பாலத்தை உடனடியாக செப்பனிட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story