கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்


கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்
x

சிவகங்கை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

ரத விழா

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. உலக மாதாவான உமாதேவி தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பத்ரகாளி உருவம் கொண்டு கண்ணுடையாள் என்ற பெயரில் இங்கு எழுந்தருளி உள்ளார்.

கண்நோய் உள்ளவர்கள் இந்த அம்மனுக்கு வெள்ளி கண் மலர் வாங்கி காணிக்கையாக செலுத்தினால் கண்நோய் தீரும் என்று கூறுவார்கள் புகழ் பெற்ற இந்த கோவிலில் நடை பெறும் விழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் வெள்ளி ரத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

சிறப்பு அபிஷேகம்

இதையொட்டி தினசரி கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும் தினசரி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 10-ந் தேதி தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் உள் பிரகாரத்தில் தங்க ரதத்தில் கண்ணுடைய நாயகிஅம்மன் திருவீதி உலாவந்தார்.

கடந்த 11-ந் தேதி இரவு 7 மணிக்குமேல் வெள்ளி ரத நிகழ்ச்சி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வந்தார். நேற்று தேரோட்டம் நடை்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

பால்குடம் ஊர்வலம்

இன்று (திங்கட்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. நாளை உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் அன்னதானமும் மாலையில் அம்மன் உள்வீதி பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் இளங்கோ செட்டியார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.


Next Story