நாமக்கல்லில் நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


நாமக்கல்லில் நாளை மறுநாள்  நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x

நாமக்கல்லில் நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நாமக்கல்

நாமக்கல்லில் நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல்லில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை முன்னிட்டு நாமக்கல்- சேலம் சாலை பொம்மைகுட்டைமேடு பகுதியில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் முகப்பு சென்னை ரிப்பன் கட்டிடம் வடிவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. வரவேற்று பேசுகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.

கருத்தரங்கம்

பின்னர் காலை 9.30 மணிக்கு கருத்தரங்கம் தொடங்குகிறது. 'மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி' என்கிற தலைப்பில் ஆ.ராசா எம்.பி., 'தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு' என்கிற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., 'திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம'் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, 'இதுதான் திராவிட இயக்கம'் என்கிற தலைப்பில் சுப.வீரபாண்டியன், 'பெண்களின் கையில் அதிகாரம்' என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர்.

மதியம் 12 மணிக்கு உணவு இடைவேளைக்கு பின்னர் தி.மு.க.வின் வரலாற்று சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை 'மக்களோடு நில், மக்களோடு வாழ'் என்கிற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகிறார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் பேசுகின்றனர். இறுதியாக மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். முடிவில் அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறுகிறார்.

உற்சாக வரவேற்பு

இந்த மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

நாளை (சனிக்கிழமை) கரூரில் அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலையில் நாமக்கல் வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Next Story